முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல் நோக்கங்களுக்காக தெற்கில் இருந்து 300 மீனவர்கள் அழைத்து வரப்பட்டு அப்பகுதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அநீதியானதென அப்பிரதேசத்திலுள்ள தமிழ் மீனவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
தெற்கு மீனவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க தேவையான நிலங்களைப் பெற, நில அளவைத் திணைக்களத்தினர் அந்தப் பகுதிக்கு சென்றிருந்த போதே, அங்கு பாரம்பரியமாக வசித்து வரும் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்தே, இரு தரப்பு மீனவர்களிடையேயும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர், நிலம் அளவிடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் தலையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.