யாழ்ப்பாணம், தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடையும் அதன்மூலம் வடமாகாண நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்பட்டுவதுடன், நன்நீர் வளத்தை பெருக்க முடியும் எனவும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
வடமாகாண நீர்ப்பாசன திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அணைக்கட்டு மற்றும் நீர்வழங்கல் கருத்திட்டமிடல் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியில் 400 மில்லியன் ரூபாய் செலவில் தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணை திருத்தியமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
1960ஆம்; ஆண்டுகளில் கட்டப்பட்ட தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணை யுத்தம் காரணமாக முறையான பராமரிப்பின்மையால் பழுதடைந்த நிலையில் நன்நீருடன் உவர்நீர் கலக்கும் அபாய நிலையில் காணப்பட்டதாகவும், தற்போது துருப்பிடிக்காத உலோகங்களாலான கதவுகள் பொருத்தப்பட்டு, அணை புனரமைக்கப்பட்டு வருவதாகவும், இதன்மூலம் விவசாயத்திற்கு தேவையான பெருமளவிலான நீர் வளத்தை பாதுகாக்க மூடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.