மீற்றர்களை பயன்படுத்துவதை நிறுத்தப் போவதாக எச்சரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்கவில்லையாயின், வண்டிகளில் காணப்படும் மீற்றர்களைக் கழற்றி வைத்துவிட்டுப் பயணிக்க நேரிடுமென, இலங்கைச் சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கரவண்டிச் சங்கம் அறிவித்துள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கான உதிரிப் பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தம்முடைய பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ள போதிலும், இதுவரை இப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், முச்சக்கர வண்டிகளிலுள்ள மீற்றர்களைக் களற்றி வைத்துவிட்டு, பயணத்தைத் தொடரவுள்ளதாவும், இந்த நடவடிக்கை, எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமெனவும், அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மேற்படிச் சங்கத்தின் தீர்மானத்துக்கு தாம் ஒருபோதும் இணங்கப்போவதில்லையென, அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.