குற்றவாளிகளின் தண்டனை தொடர்பில் மாற்றம் வேண்டும்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கையின் குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து விடுதலையாகும் நிலைமை அதிகரித்துள்ள நிலையில், இந்த நிலைமையை நீக்கிக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச அமைப்பொன்று கோரியுள்ளது.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால், கடந்த 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தி எல்டர்ஸ் என்ற முதியோர் சர்வதேச அமைப்பினாலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர், கண்டி மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் இடம்பெற்ற இன ரீதியான சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, குறித்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்குரிய தண்டனையை வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ, யார் குற்றத்தை மேற்கொண்டிருந்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க, அவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்க வேண்டாமெனவும் வலியுறுத்தியுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தைப் பிரயோகிப்பதன் மூலம் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியுமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எந்தவொரு தரப்பும், சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொள்ள இடமளிக்க வேண்டாமெனவும், அவ்வாறில்லாவிடின், மேற்படிச் சம்பவத்தை உதாரணமாகக் கொண்டு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பளிக்கப்பட்டு விடுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.