அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் உரிய நடவடிக்கை அவசியம் – டக்ளஸ் எம்.பி

சிறப்புச் செய்திகள் செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புவதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், தமிழ் அரசியல் கைதிகள் குற்றங்களுடன் தொடர்புபட்டிருந்தால் அது குறித்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, துரித விசாரணைகள் நடத்தப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளில் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் கொழும்புக்கு வெளியிலுள்ள நீதிமன்றங்கள் பலவற்றிலும்; தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளிலிருந்து வெகுதொலைவிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைத் தவணைகளுக்காக கொண்டு செல்லப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகள், சில தினங்கள் அந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட சிறைச்சாலைகளில் அல்லது மறியச்சாலைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற போது, ஏனைய கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்புபட்ட கைதிகளுடன் ஒன்றாக தடுத்து வைக்கப்படுகின்ற நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்கின்ற இடையூறுகள், கொடுமைகள் என்பன ஏராளம் என்றும் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நிலைமைகளில் பல்வேறு தாக்குதல்களுக்குள்ளாகும் நிலைமைகளும் இல்லாமல் இல்லையெனத் தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுக்கென தனியான ஏற்பாடுகள், பாதுகாப்பு என்பன இருந்ததாகவும், தற்போது அந்த நிலைமைகள் மாற்றப்பட்டு, ஏனைய குற்றவியல் வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகளுடனேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மாலைதீவு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, மாலைதீவில் 09 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள மூவர் கடந்த 03 வருடங்களாக வெலிக்கடைச் சிறையில் எவ்விதமான வழக்குகளும் தாக்கல் செய்யப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.

எனவே, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்து சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.