பொருளாதார, வர்த்தக கூட்டுறவை மேம்படுத்த பாகிஸ்தான் இணக்கம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பொருளாதார, வர்த்தக கூட்டுறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷஹீத் கான் அப்பாஸி உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் பாதுகாப்பு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொருளாதார கூட்டுறவில் ஒரு பில்லியன் டொலர் வர்த்தக இலக்கை எட்டுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத்துறையில் தமது அனுபவங்களை இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்கத் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை விஷேட கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

தமது முதிர்ச்சியான அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி கண்டியில் இடம்பெற்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்ட விதம் குறித்து தமது கௌரவத்தை தெரிவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வுகளை சில பிரிவினர் தவறாக பயன்படுத்த முயற்சித்து வருவதாகவும், மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.