தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை 2,000 பஸ்களை மேலதிக சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.
இதற்கு தேவையான மேலதிக பஸ்கள், நுவரெலியா, கண்டி, பதுளை உள்ளிட்ட பிரதேச அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இந்த பஸ் சேவைகள் இடம்பெறும் என்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குட்பட்ட 103 டிப்போக்களை உள்ளடக்கிய வகையில், இந்த விஷேட பஸ் சேவைகள் இடம்பெறும் என்றும், நிறுவன வலயத்திற்கு அருகாமையில் இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.