புதிய பயணம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடைச் செய்ய தாங்கள் அனைவரும் மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இது மிகச் சிறந்த வெற்றி என்பதுடன், தாங்கள் அனைவரும் வழங்கிய சேவையை மறக்கப்போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய பயணமொன்றில் பயணிக்க வேண்டிய நிலைமை உள்ளதுடன், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை மிகவும் விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும், அரசாங்கத்திலுள்ள சிலர் தூரமாகி உள்ள போதிலும், எஞ்சியுள்ளவர்களுடன் இணைந்து முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும், இந்தநிலையில், ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனவரி 8ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியைப் பாதுகாத்து அதன் விதிகளுக்கு அமைய முன்னோக்கி செல்வோமென ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.