யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய போதைப் பொருள் விற்பனை நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய போதைப்பொருள் விற்பனை நிலையம் நேற்று மாலை முற்றுகையிடப்பட்டு அங்கு போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவரையும் போதைப்பொருளை பெற்றுக்கொள்ள வந்த இளைஞர்கள் நால்வரையும் பொலிஸார் கைது செய்ததுடன், இன்று அவர்கள் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, யாழ்ப்பாணத்துக்கு மாவா போதைப் பொருளை விநியோகிக்கும் பிரதான நபர் புத்தளத்தில் உள்ளதாகவும், அவர் உட்பட மேலும் சிலரைக் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்த நிலையில், சந்தேகநபர்களை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.