எஞ்சிய தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா

சிறப்புச் செய்திகள் செய்திகள்

தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பிலான நேர்முகத் தேர்வில் இணைத்துக் கொள்ளப்படாத எஞ்சியுள்ள தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நியமனங்களையும் உறுதிசெய்து தருவவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறுகோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறித்த சந்திப்பின்போதே பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் ஒருதொகுதியினர் செயலாளர் நாயகத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தொண்டராசிரியர் நிரந்தரமாக்கலுக்கான நேர்முகத் தேர்வில் உள்வாங்கப்பட்ட மிகுதி தொண்டராசிரியர்களை நிரந்தரமாக்குவதற்கான நேர்முகத் தேர்வு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கடும் முயற்சியின் பயனாக நாளையதினம் (இன்று) நடைபெறவுள்ள போதிலும், குறித்த நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது எஞ்சியுள்ள தொண்டராசிரியர்கள் செயலாளர் நாயகத்திடம் தமது நிரந்தரமாக்கலுக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், நீண்டகாலமாக ஊதியங்களைக்கூட எதிர்பாராது தாம் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் குறித்த தொழிலையே தமது எதிர்காலமாக நம்பியிருப்பதாகவும் குறித்த சந்தர்ப்பம் தமக்கு கிடைக்காது போனால் தமது குடும்பநிலை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்த அவர்கள் தமக்கும் அச்சந்தர்ப்பத்தை பெற்றுத்தருமாறு டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தொண்டராசிரியர்களது கோரிக்கைள் தொடர்பில் அவதானம் செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் அகிலவராஜ் காரியவசத்துடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதன் பிரகாரம் பாதிக்கப்பட்டுள்ள தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பில் காலக் கிரமத்தில் தீர்வு பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.