ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியச் செய்திகள்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவற்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

மாணவர் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நடத்திய நிலையில், குறித்த பேரணி காவற்துறை தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போது, திடீரென போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக்கூறி இலக்கு வைத்து போலீசார் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இத்துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியானதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார்.

மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், மாணவர் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 3 பெண்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகினர். 17 வயது மாணவி முழக்கமிட்டார் என்பதற்காக அவரது வாயை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.