தொழிலற்ற இளைஞர்கள் இலங்கையில் அதிகம் உள்ளதாக உலக வங்கியின் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
குறைந்த ஊதியத்தை பெற்று பெண்கள் பணியாற்றுவதும் அதிக அளவில் இடம்பெறுவதாகவும், கடந்த ஆண்டு இலங்கையில் நான்கு லட்சத்து 97 ஆயிரம் தொழில் வெற்றிடங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் பெறுபவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற தகைமையை குறிப்பாக இளைஞர்கள் பெறாததன் காரணமாகவே, இந்த வெற்றிடங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலைமையை மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையில் நிலைகொண்டிருக்கும் உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இளைஞர் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்சினையைச் சரிசெய்வதற்கு தனியார் மற்றும் பொது நிறுவனங்களால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாத்துறையினரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், விருந்தக பணியாளர்களின் சேவை சிறந்த முறையில் அமைவதற்கு ஏற்ற வாய்ப்புக்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.