குள்ள மனிதர்கள் பற்றிய குரல் கொடுத்த டக்கிளஸ் தேவானந்தாவின் கேள்விக்கு பதில் தந்த ரஞ்சித் மத்தும பண்டார

இந்தியச் செய்திகள் செய்திகள்

யாழில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படும் குள்ள மனிதர்கள் தொடர்பாக இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

27 இன் கீழ் 2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் கிறீஸ் பூதங்களால் அச்சுறுத்தப்பட்டு வந்த மக்கள் தற்போது குள்ள மனிதர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இதன் பின்னணி என்ன டக்ளஸ் தேவானந்தா மன்றில் வினவினார்.

அத்துடன், யாழில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் சமூக விரோதச் செயற்பாடுகளினால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், அவருக்கு பதிலளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர், ”குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையங்களில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை.

வடக்கில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஆவாக் குழுவுடன் தொடர்புடை 31 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.