இளையராஜா இசைநிகழ்வில் பங்கேற்பது தமிழர்களைக் கொச்சைப்படுத்துவதானது

இந்தியச் செய்திகள்

இலங்கையில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம், யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொள்கின்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை காலை 11.00 மணியளவில், இளையராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதைக்கருத்தில் கொள்ளாமல், இலங்கை அரசாங்கம், உலகை ஏமாற்றும், நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு, இசை நிகழ்வு நடத்துகின்றது. இந்நிகழ்வில் இளையராஜா பங்குபற்றக் கூடாதென முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கில் இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி இரவு பகலாக, பெண்கள், சிறுவர்களென மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு நடைபெறவுள்ள இசை நிகழ்வில் இளையராஜா கலந்துகொண்டு, இசை நிகழ்வு நடத்துவது, தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாக அமையும். எனவே, உலகத் தமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, இந்நிகழ்வை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.