தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை

இந்தியச் செய்திகள்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் 135 மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதையும் அவர்களின் படகுகளை பறித்து செல்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. பிடித்து செல்லும் மீனவர்களை அவ்வப்போது நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுவித்த போதிலும், படகுகள் விடுவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகள், பழுதடைந்துள்ளது. மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.