இலங்கையணி தொடர்ச்சியாக பல தோல்விகளை சந்தித்து வருவதனால், கிரிக்கெட் சபையின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் எமது அணி வெல்லவேண்டுமானால் கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ளவர்களை மாற்றவேண்டிய தேவையுள்ளதாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின் ஊடகவியளார்கள் மத்தியில் தெரிவித்துள்ளதுடன், கிரிக்கெட்டுக்கு கெட்ட காலமாக உள்ளதாகவும், இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்நிலையேற்படுமெனத் தான் கூறியதாகவும், காரணம் தவறானவர்கள் கிரிக்கெட் நிர்வாகத்தை கையிலெடுத்துள்ளமை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியுடனான போட்டியின் தோல்வியால் மனமுடைந்து போயுள்ள எமது அணி வீரர்களை உளவியல் ரீதியாக பலப்படுத்த வேண்டும். இவர்களுக்கு சரியான பயிற்சி கொடுக்கப்படுகின்றதா என்பதை கவனிக்க வேண்டும் என்ற போதிலும், சில காட்டிக்கொடுப்புகள் நடப்பதனால் இந்த விளையாட்டில் எதனையும் எதிர்பார்க்க முடியாதுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சாரியனவர்களின் கைகளில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக இந்த அரசாங்கம் வந்த பின் இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவிகளை துறந்தார்கள். அவர்கள் தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதாலேயே பதவிகளை துறந்தார்கள். ஆனால் இன்று கிரிக்கெட் கீழ்நிலைலைக்கு போய்விட்டதனால், கிரிக்கெட் சபைத் தலைவர் அந்தப் பதவியில் இருப்பது நியாயமில்லை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இன்று முதுகெலும்பு கொண்ட நிர்வாகம் இல்லை எனவும், இன்று சிறந்த கிரிக்கெட் தெரிவுக்குழுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.