யாரை அமைச்சுப் பதவிக்கு நியமிப்பது என்பது எனது முடிவு – வடக்கு முதலமைச்சர்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கட்சி நலன்கருதி அமைச்சுப் பதவிக்கு ஒருவரை சிபாரிசு செய்வது உங்கள் பொறுப்பாக இருக்கின்ற போதிலும், ஆட்சி நலம் சார்ந்து நடவடிக்கை எடுப்பது முதலமைச்சரின் பொறுப்பென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா, செவ்வாய்க்கிழமை (22) அனுப்பியிருந்த கடிதத்துக்கு, முதலமைச்சர் நேற்று (23) அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்சிகளால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லாது பிறரை முன்னைய அமைச்சரவையில் உள்ளடக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அது உண்மையே என்றும், அமைச்சர்களை நியமிப்பது முதலமைச்சரின் பொறுப்பு. அப்பொறுப்பானது உங்களை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் யாவராலும் அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு நியமிக்கும் போது தகைமை, கட்சி, மாவட்டம், பால் சமநிலை, மக்கள் செல்வாக்கு, கூட்டுறவு மனப்பான்மை போன்ற பலவற்றையும் கருத்திற்கொண்டே முதலமைச்சர், அமைச்சர்களை நியமிக்கின்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறுமனே கட்சி அடிப்படையிலும் கட்சியின் தலைமைத்துவத்தின் விருப்பு வெறுப்புக்களுக்கும் அமைய நியமனங்கள் அமைவதில்லை. கூடிய வரையில் கட்சியின் சிபார்சுகள் சிந்தனைக்கு எடுக்கப்படுவதாகவும், கட்சிகள் எடுக்கும் தீர்மானங்கள் சிபாரிசுகளே அன்றி, ஒரு முதலமைச்சரைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகக் கொள்ளக் கூடாது. அவ்வாறான புறக்கணிப்புக்கள் அரசியல் ரீதியாக முதலமைச்சரொருவரை வெகுவாகப் பாதிக்கக் கூடியவை எனவும், அதற்காகக் கட்சிகளின் தலைமைத்துவம் கூறுகின்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தனது தீர்மானங்களைப் பிறழச் செய்வதற்கு தயாரில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.