உத்தரப் பிரதேசத்தில் மேலும் 49 குழந்தைகள் பலி

இந்தியச் செய்திகள்

உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிராணவாயு பற்றாக்குறை காரணமாக 60ற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் பிராணவாயு பற்றாக்குறையால் கடந்த ஒரு மாதத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாவட்ட நீதவான் ரவீந்திர குமார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பட்டார். நீதவான் நடத்திய விசாரணையில் குழந்தைகள் பிராணவாயு தட்டுப்பாட்டால் பலியானது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், குழந்தைகள் உயிரிழப்புக்கு பிராணவாயு பற்றாக்குறை மட்டும் காரணமல்ல மருந்துகள் பற்றாக்குறையும் தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் உயர் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள பரூக்காபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் பிராணவாயு மற்றும் மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக பெற்றோர்கள் புகார் வழங்கியதைத் தொடர்ந்து, மாவட்ட நீதவான் சென்று மருத்துவமனையில் விசாரணை நடத்தியதாகவும், மருத்துவமனையில் அப்போது பணியாளர்கள் இல்லாத காரணத்தால், எத்தனை குழந்தைகள் பலியாகினர் என்பது தொடர்பில் உறுதியான தகவல் வரவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.