வடக்கில் வளர்ச்சிபெற்ற பிரதேச சபைகளை நகர சபைகளாகத் தரமுயர்த்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி

சிறப்புச் செய்திகள் செய்திகள்

வடக்கில் நகரங்களாக வளர்ச்சிபெற்ற பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்த வேண்டுமென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1989ஆம் ஆண்டுக்கு முன்னர் நகர சபைகளாக (பட்டின சபைகளாக) இருந்த சங்கானை, சுன்னாகம், காங்கேசன்துறை, நெல்லியடி, பண்டதரிப்பு, உரும்பிராய், மானிப்பாய், ஊர்காவற்துறை, ஆகியனவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நகரங்கள் 1989ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்துடன், பட்டின சபைகள் என்ற அந்தஸ்தை இழந்து பிரதேச சபைகளாக மாற்றம் பெற்றன.

கடந்த 25 வருட காலப்பகுதியில் இந்த குறிப்பிட்ட பத்து பிரதேசங்களில் சுன்னாகம், சங்கானை, நெல்லியடி, மானிப்பாய், ஆகிய பிரதேசங்கள் பாரிய நகரங்களாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆகவே இந்த நகரங்களின் வளர்ச்சியை கவனத்தில் எடுத்து அச்சபைகளை நகர சபைகளாக தரம் உயர்த்தி அதற்குரிய அந்தஸ்த்தும் கொடுக்கப்பட வேண்டுமென நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தின் தலைநகராகவும், கல்வி, வர்த்தகம், விவசாயம், கைத்தொழில் மையங்கள் போன்ற செயற்பாடுகளின் மையமாகவும் கிளிநொச்சி நகரம் வளர்ச்சி பெற்றிருப்பதால், கிளிநொச்சி பிரதேச சபையை நகர சபையாக தரம் உயர்த்த வேண்டும் எனவும், நகர சபையாக தரம் உயர்த்தப்படும் போதுதான், அச்சபையின் நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் சிறப்பாக செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்தின் வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் கவனத்தில் கொண்டு முல்லைத்தீவு பிரதேச சபையையும் நகர சபையாகத் தரம் உயர்த்தி நகரில் வாழும் மக்களுக்கு அச்சபை சிறப்பான சேவையை வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதைத் தவிர வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி, கிளிநொச்சியில் கண்டாவளை, முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான், மன்னாரில் மடு ஆகிய 04 பிரதேசங்களுக்கான பிரதேச செயலகங்கள் அமையப்பெற்றுள்ள போதிலும், பிரதேச சபைக் கட்டமைப்பு உருவாக்கப்படாமல் இருக்கின்றன. இந்த 04 பிரதேசங்களுக்கும் தனியான பிரதேச சபைக் கட்டமைப்பு இல்லாமையால், அடிமட்ட கிராமிய அபிவிருத்தியைக்கூட முன்னெடுப்பது அப்பிரதேசத்தில் கடினமான காரியமாக இருப்பதாகவும், பிரதேச சபைக் கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் இப்பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுவதனால், இந்த 04 பிரதேசங்களுக்கும் பிரதேச சபைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் குறைபாடுகள்; உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்னார் நிவர்த்திக்கப்பட வேண்டும். பாதிப்புகக்ளுக்கும், வளர்ச்சிப் பின்னடைவுகளுக்கும் உள்ளாகியிருக்கும் இப்பிரதேச மக்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாமல், உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுமாக இருந்தால், அது குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பயனற்றதாகவே இருக்கும் எனவும் டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.