அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் பார்னபி ஜோய்ஸ் இரட்டைக் குடியுரிமையுடன் தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளது.
பார்னபி ஜோய்ஸ் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தின் குடியுரிமையைப் பெற்றுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்டு வென்றதாக வழக்கு தொடரப்பட்டது. அவுஸ்திரேலிய சட்டப்படி இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஜோய்ஸ் மட்டுமல்லாமல் இதே குற்றச்சாட்டின் கீழ் 07 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் ஜோய்ஸ் உள்ளிட்ட மூவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
ஜோய்ஸ் துணைப் பிரதமராகவும் மற்றைய இருவரும் செனட் சபை உறுப்பினர்களாகவும் செயற்பட்டுள்ளனர். இவர்கள் தவிர்த்து குற்றஞ்சாட்டப்பட்ட 04 பேர் ஏற்கனவே தமது பதவியை ஜூலை மாதம் இராஜினாமா செய்துள்ளனர். தற்போதைய நிலையில், அந்நாட்டு அரசியலில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.