கேட்டலோனியா தலைவரை விடுவிக்க உத்தரவு

உலகச் செய்திகள்

தப்பியோடிய கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமான்ட் மற்றும் 04 முன்னாள் அமைச்சர்களை பெல்ஜியம் நீதிமன்றம் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயினில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கேட்டலோனியா மாகாணம் சுதந்திரம் கேட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தியதில், வெற்றி பெற்ற நிலையில், கேட்டலோனியா ஒரு தனிநாடு என அறிவிக்கப்பட்டது.

அதை ஏற்காத ஸ்பெயின் பிரதமர் மரியானோ ராஜேஸ், கேட்டலோனியா பாராளுமன்றத்தைக் கலைத்து அதை ஸ்பெயினின் நேரடி மேற்பார்வையில் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமான்ட் மற்றும் 04 முன்னாள் அமைச்சர்கள் பெல்ஜியத்திற்கு தப்பி ஓடிவிட்டனர். எனவே, அவர்களை நாட்டிற்குக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் கைது ஆணை பிறப்பித்தது.

இந்த வழக்கை விசாரித்த பெல்ஜியம் நீதிமன்றம் கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமாண்ட் மற்றும் 04 முன்னாள் அமைச்சர்களை பிணையில் விடுவித்துள்ளது.

மேலும் அமைச்சர்களை உடனடியாக ஸ்பெயினுக்கு அனுப்ப வேண்டியதில்லை என்றும் 15 நாட்களில் பெல்ஜியம் நீதிமன்றில் மீண்டும் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.