வடக்கு, கிழக்கு தவிர்ந்த மாகாணங்களில் சிங்கள மொழியை உத்தியோகபூர்வமாக்க வேண்டும்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியும் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களில் சிங்கள மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசியல் யாப்பு உருவாகவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், சிங்கள மொழி ஏழு மாகாணங்களிலும் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறதோ, அதன் அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உத்தியோகபூர்வ மொழி சிங்களமும் தமிழுமாகும். பிரதேச சபைகளில் மக்களின் இன விகிதாசாரங்களின் அடிப்படையில் உத்தியோகபூர்வ மொழிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும், பிரிக்க முடியாத நாடாக புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி வருவதாகவும், இதனடிப்படையில் நாட்டிலுள்ள சகல மக்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் வாழ முடியுமான சூழல் உருவாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.