கண்சத்திர சிகிச்சை விவகாரம்; விசாரணைக்குழு நியமனம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட கோளாறுகள் தொடர்பான விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பரீட், டொக்டர் மங்களா கமகே மற்றும் டொக்டர் குமுது கருணாரத்ன ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த குழுவினர் அடுத்த வாரமளவில் யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், சத்திரசிகிச்சை தொடர்பில் தனியார் வைத்தியசாலையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உள்ளிட்ட பல விடங்கள் குறித்து இதன்போது விசாரணை செய்யப்படும் எனவும் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த மாதம் 21ஆம் திகதி 10 பேருக்கு கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது, கண் சத்திரசிசிக்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் 05 பேர் தேசிய கண் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரை வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சத்திர சிகிச்சைப் பிரிவுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.