இலங்கைக்கு வழங்கும் நிதி உதவிகள் தொடர்பாக, பின்னிணைப்புகள் எவற்றையும் சீனா கொண்டிருக்காதென உறுதியளித்த சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, மனித உரிமைகள் விசாரணைகளையோ அல்லது போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களையோ, முன் நிபந்தனைகளாகச் சேர்க்காது எனவும் உறுதியளித்துள்ளது.
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்களை நேற்று (14) சந்தித்த சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரங்கள் திணைக்கள, தெற்காசியப் பிரிவின் செயலாளர் ஸாங் சொங், இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர், இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகள், பல நூற்றாண்டுகள் நீண்டுள்ள கலாசார, வர்த்தக, சமயத் தொடர்புகளை அடிப்படையாகவே கொண்டிருக்கும் எனவும், எந்த நாட்டுக்கும் வழங்கும் அபிவிருத்தி, தொழில்நுட்ப உதவிகளும், அரசியல் அல்லது தனிநபர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், இலங்கையில் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியிலான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களைச் சீனா முன்னெடுத்த போதிலும், அவர் மீது விஷேடமான விருப்பேதும் கிடையாது என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான இந்த அரசாங்கத்துடன், நெருக்கமானதும் சிநேகபூர்வமானதுமான உறவை, சீன அரசாங்கமும் சீனத் தலைவர்களும் பேணுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.