தொண்டமான் பெயர் இடம்பெற நடவடிக்கை எடுக்கவும் – ஸ்டாலின்

இந்தியச் செய்திகள் செய்திகள்

இலங்கை அரசு நிறுவனங்களில் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயர் உடனடியாக இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய, சவுமியமூர்த்தி தொண்டமானுடைய பெயரை, அரசு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் இருந்து நீக்கி வரும் இலங்கை அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை தங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இந்தியத் தமிழர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், அவர்களுடைய பங்களிப்பை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு, சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை அரசு நிறுவனங்களில் இருந்து நீக்கியிருப்பதாகவும், மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், கண்ணியத்துக்காகவும் சௌமியமூர்த்தி தொண்டமான் பாடுபட்டார் என்ற உண்மையை உணர்ந்திருப்பீர்கள். என்னதான் இலங்கையை, இந்தியா நட்பு நாடாக கருதினாலும், அதனுடைய வளர்ச்சிக்கு பொருளாதார உதவிகளை செய்தாலும், இந்தியாவின் நல்லெண்ணத்துக்கு மாறாகவே இலங்கை செயற்பட்டு வருகிறது என்பதை ஏமாற்றத்துடன் நினைவுபடுத்த விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மலையகத் தமிழர்களின் அன்புக்குரியத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை அகற்றி, அவர்களையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இந்த தொடர் நடவடிக்கைகள், ஒரு நட்பு நாட்டின் சமரசமிக்க, பொறுப்புமிக்க எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை. எனவே, தொண்டமானின் பெயரை நீக்கும் உணர்வுபூர்வமான நடவடிக்கையை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதுடன்,, அந்த பெருமைமிக்கத் தலைவரின் பெயருக்கும், புகழுக்கும் எந்த வகையிலும் களங்கம் ஏற்படாமலும், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வகையில் அவருடைய பெயரை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தங்களை கேட்டுக்கொள்வதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.