இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா தெரிவு

செய்திகள் விளையாட்டு

இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் ரி-ருவன்ரி தொடர்களில் இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா செயற்படுவாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் சமநிலையில் முடிவடைந்ததுடன், நேற்று முன்தினம் நிறைவடைந்த 2-வது டெஸ்டில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பமாகிறது.

அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி டிசம்பர் 10இலும், 2ஆவது போட்டி 13இலும், 3ஆவது போட்டி 16ம் திகதியும் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், தற்போது இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டுவரும், உப்புல் தரங்கவிற்கு பதிலாக, இந்தியாவுக்கு எதிரான 20க்கு இருபது மற்றும் ஒருநாள் தொடரில் திஸர பெரேரா தலைவராக செயற்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.