மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் – மியன்மாரில் பாப்பரசர்

உலகச் செய்திகள் செய்திகள்

அனைத்துப் பிரிவினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், அனைவரின் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டுமென போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

மியன்மாருக்கு 04 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அதிபர் மாளிகையில் நேற்று (28) நடைபெற்ற நிகழ்விலேயே இதனைத் தெரிவித்துள்ளதுடன், அனைத்து இனப் பிரிவினரின் தனித்துவ அடையாளத்திற்கும் உரிய மரியாதையளிக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் போப் வலியுறுத்தியுள்ளார்.

ரோஹிஞ்யாக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை மறைமுகமாகக் குறிப்பிட்டாலும், ரோஹிஞ்யா என்ற பெயரை தனது உரையில் போப் பிரான்சிஸ் குறிப்பிடவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, மியன்மார் இராணுவத் தலைமை தளபதி மின் ஆங்ஹலைங், போப் பிரான்சிஸை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசிய போது, நாட்டின் பாதுகாப்பை இராணுவம் உறுதி செய்வதாக போப்பிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ அடக்குமுறை காரணமாக சுமார் 06 இலட்சம் ரோஹிஞ்யாக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போப் பிரான்சிஸின் மியன்மார் பயணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.