மின்கட்டண பட்டியல் கிடைக்காத மக்கள் மீதத் தொகைகளைச் செலுத்த கால அவகாசம் வேண்டும்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

மின் கட்டணப் பட்டியல் நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை அம்மக்கள் மீளச் செலுத்துவதற்கு அவர்களுக்கு ஒரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதாவது, மின் கட்டணம் எத்தனை மாதங்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டதோ, அத்தனை மாத கால அவகாசத்தில் அந்தப் பாக்கித் தொகையை தவணை அடிப்படையில் மீள அறவி;ட்டால் மாத்திரமே எமது மக்களால் அதனை ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இனியும் இத்தகைய நிலை ஏற்படாத வகையில் அந்தந்த மாதங்களுக்கான மின் கட்டணப் பட்டியல்கைள பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக உரிய வகையில் அதற்கான ஆளணிகளை நியமிக்குமாறும் மேலும் தற்போது வடக்கு மாகாணத்தில் இலங்கை மின்சார சபையினைப் பொறுத்தமட்டில் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுவதாகக் கூறப்படுகின்ற நிலையில் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.