பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்க சுயாதீனக் குழு அவசியம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்கு, ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் மூலம் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்குமாறு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இன்று (13) அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் 3,000 ஆயிரத்துக்கு நியமன வெற்றிடங்கள் நிலவுகின்ற வேளையில் 1,441 பேருக்கான நியமனத்திற்கு அனுமதி இருந்தும் 1,119 பேருக்கே அண்மையில் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் குறித்து பட்டதாரிகள் ஊடாக மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளன. இதனைப் பார்க்கும் போது குறித்த பட்டதாரி நியமனங்களின் போது, அநீதிகள் மற்றும் குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதை உணர முடிகின்றது.

எனவே, இதன்காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கும் ஆர்பாட்டங்களைப் புறந்தள்ளி விடமுடியாது என்ற நிலையில், பட்டதாரி நியமனத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்க ஆளுநரால் அவரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவானது குற்றஞ்சாட்டப்பட்டவரே குற்றத்தை விசாரிக்க நீதிபதிக் குழாத்தை நியமிப்பதற்கு ஒப்பானதாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அநீதிக்குள்ளாக்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் அதிருப்தியும் கோபமும் நல்லாட்சி மீதே திரும்பும் என்பதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. எனவே, ஜனாதிபதியவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிக்க, சுயாதீனக் குழுவொன்றை நியமிக்குமாறு, கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சார்பில் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.