சிவனொளிபாதமலை சென்றவர்களிடமிருந்து கஞ்சா மீட்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற 10 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்டுகள் மற்றும் சட்டவிரோத சிகரெட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மாலை ஹட்டன் குற்றத் தடுப்பு விஷேட பிரிவினரால் ´கோரா´ என்ற மோப்ப நாயின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் காலி பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே குறித்த கஞ்சா மற்றும் சிகரெட் பக்கட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை - தியகல பகுதியில் 15 வாகனங்களை ஹட்டன் குற்றத்தடுப்பு விஷேட பிரிவினர் சோதனை செய்த போது, மூன்று வெவ்வேறு வாகனங்களில் பயணித்த ஒன்பது பேரிடமிருந்து 11,000 மில்லிகிராம் கஞ்சா பக்கட்டுகளும், ஒருவரிடமிருந்து இரண்டு சிகரட் பக்கட்டுகளும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பத்து பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விஷேட பிரிவினர், அவர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.