நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்த ஜனாதிபதி அழைப்பு

சிறப்புச் செய்திகள் செய்திகள்

இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதன் ஊடாக அரசியல் லாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை இன்று திறந்துவைத்து உரையாற்றும் போதே இந்த அழைப்பை விடுத்துள்ளதுடன், இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை அனைவரும் அறிந்ததே. நாட்டில் அன்பு செலுத்துகின்ற அரசியல்வாதிகள் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்பது ஒரு பிரச்சினையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் - அரசியல் ஆதாயம் பெறுவதற்காக சிலர் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்து வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்று அவசியமில்லை. இந்த நாட்டில் உள்ள தேசிய ஒற்றுமை மற்றும் சக்தியை பலப்படுத்த வேண்டுமென்ற அவசியமும் இல்லை. இந்த நாட்டு மக்கள் மத்தியில் நிரந்தரமான ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்பதும் அவர்களின் நோக்கம் அல்ல. அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின்படி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்பதே நோக்கமாக இருக்கின்றது.

அவ்வாறான சக்திகளிடம் ஏமாந்து போவதற்காகவும் மக்கள் இருக்கின்றார்கள். நாட்டின் பிரச்சினையைத் தீர்;ப்பதற்காக மிகவும், நியாயமான முறையில் சிந்திக்கக்கூடியவர்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எதிர்காலத்தில் யார் அடுத்த ஜனாதிபதி மற்றும் அடுத்த பிரதமராக வரப் போகின்றார்கள் என்பதல்ல மக்களின் பிரச்சினை. சிலர் நீண்டகாலமாக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால், ஒரு சிலர் மாத்திரமே நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்பட்டு வருகின்றார்கள்.

கடந்த 50 மற்றும் 60 ஆண்டுகால இந்த நாட்டின் அரசியலைப் பார்த்தால், அதுவே எமக்குத் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. இவைகள் அனைத்தினையும் வைத்து எமது அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் மீது அன்பு செலுத்தாது, உண்மையில் அரசியல் ஆதாயத்திற்காக செயற்படுபவர்களை மக்கள் இனங்கான வேண்டும். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நாட்டு மக்கள் எனக்கு நல்லதொரு வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள். மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையினை ஒரு நாளும் நான் வீணடிக்கவில்லை. அந்தக் கொள்கையை நான் மாற்றவும் இ;ல்லை.

எவ்வளவு எதிர்ப்பு அரசியல் வந்தாலும் கூட எனது கொள்கையை மாற்றப் போவதுமில்லை. யார் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என்பதனை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்,தெரிந்துகொள்ள வேண்டும். அரசியல் சந்தர்ப்பவாதிகளை இணங்காண வேண்டும். அவற்றினைப் பற்றி மிகவும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஒன்றைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்படுவோம்.தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் எமக்குத் தேவையில்லை. நாளை எமது நாட்டின் எதிர்காலம் எந்த எல்லையை தொட வேண்டுமென்பதே எமது முக்கியமான பிரச்சினை. அந்த கொள்கையினை நாம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

இந்தப் பாடசாலைக்கு வரும் வழியில், காணாமல் போனோர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. காணாமல் போனோர் விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளதுடன், அதற்கான ஒரு குழுவினையும் நியமித்துள்ளோம். காணாமல் போனோர்களின் குடும்பத்தின் நலன்விடயங்களை பார்ப்பதற்கான அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது. குhணாமல் போனோர் தொடர்பான வேலைத்திட்டத்தினை தெளிவாக மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், தெளிவுபடுத்தியுமுள்ளோம். ஆகவே, காணாமல் போனோர் விடயம் தொடர்பாக திரும்பவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன்.

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து நாட்டிற்காக செயற்படுவோம். இனங்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். இனங்களுக்குள் உள்ள முறுகல் நிலையை இல்லாமல் ஒழிப்போம். ஆதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம். எமது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையின் போது, கடந்த தேர்தலில் வடமாகாண மக்கள் எனக்கு அளித்த ஆதரவினைப் பற்றிச் சொன்னார். நான் அந்த செய் நன்றியை மறக்கவில்லை. அந்த செய் நன்றியை மறக்காத காரணத்தினால் தான் வடமாகாணத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.