பாலஸ்தீன நாட்டவர்கள் 16 பேர் பலி

உலகச் செய்திகள்

காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலஸ்தீன - இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர். அவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முயற்சித்தனர். போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து, பலஸ்தீனர்களின் வசிப்பிடங்களை நோக்கி குண்டுவீசியும் நடாத்திய தாக்குதல்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 1976ஆம் ஆண்டு இஸ்ரேலிய இராணுவப் படைகள் பலஸ்தீனர்களின் நிலத்தை பறிமுதல் செய்தபோது நடத்திய தாக்குதலில் ஆறு பலஸ்தீனிய போராட்டக்காரர்கள் உயிரிழந்த தினம் மார்ச் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதையொட்டி இந்த பேரணி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.