உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானிக்கு உறுப்பினர்களின் கையொப்பங்கள் அவசியமில்லை

முக்கிய செய்திகள் 1

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி இன்று(திங்கட்கிழமை) அல்லது நாளைய தினம் அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக இதுவரை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.