
துருக்கியில் 104 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிமுயற்சியுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவர்களுக்கு கடுமையான ஊழியத்துடன் கடும் சட்டதிட்டங்களின் அடிப்படையில் இந்த தண்டனை அமையும் எனவும், சதித் திட்டத்தை தீட்டியவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் அண்டு துருக்கி இராணுவத் தரப்பினர் இணைந்து இராணுவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் துருக்கி ஜனாதிபதி ரிசப் தாயிப் ஏர்டோகன் தலைமையிலான அரசாங்கத் தரப்பினரால் முறியடிக்கப்பட்டது.
இந்த சதிப் புரட்சியின் காரணமாக 260 பேர் மரணமடைந்ததுடன், 2,200 மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த புரட்சி முறியடிக்கப்பட்டதன் பின்னர், ஒன்றரை லட்சம் அரச பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், 50 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சதி முயற்சியுடன் தொடர்புடைய முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது 104 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.