பொதுமக்கள் சந்திப்பு முல்லைத்தீவுக்கு இடமாற்றம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

திருகோணமலையில் எதிர்வரும் 2ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பு முல்லைத்தீவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

காணாமல்போனார் தொடர்பான அலுவலகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளதுடன், இதற்கமைய, எதிர்வரும் 2ஆம் திகதி முல்லைத்தீவிலும் 13ஆம் திகதி திருகோணமலையிலும் 23ஆம் திகதி கிளிநொச்சியிலும் பொதுமக்கள் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், காணாமல்போனார் தொடர்பான அலுவலகத்தின் 12 பிராந்திய காரியாலயங்களில் 08 காரியாலயங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய வடக்கு, கிழக்கு மாவட்டங்களிலும், கண்டி, குருநாகல், மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய ஏனைய மாவட்டங்களில் இந்தப் பிராந்திய காரியாலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தப் பணிகளை உருவாக்க இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையில் காலம் தேவைப்படுவதாகவும், காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் பிரதான அலுவலகத்தை கொழும்பில் அமைக்கும் பணிகள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலுவலகத்துக்கான நிரந்தர கட்டிடத்தைப் பெற்றுக்கொள்வதற்கான கேள்விக் கோரல் அழைப்பு நாளைய தினமே (இன்று) மூடப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் மதிப்பீடுகளை மேற்கொண்டு, முன்னெடுக்க வேண்டிய பணிகளுக்காக ஒரு சில மாதங்கள் கால அவகாசம் எடுக்கும் என்றும் காணாமற்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஷ் மேலும் தெரிவித்துள்ளார்.