20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் தீர்மானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஜே.வி.பி முன்வைத்துள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக செயற்பட ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது உள்ளிட்ட சரத்துகள் அடங்கிய இந்த சட்டமூலத்தை, ஜே.வி.பி கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளித்த நிலையில், இது குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராய்ந்த ஒன்றிணைந்த எதிரணி, அதற்கு எதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒன்றிணைந்த எதிரணியின் சார்பில் ஒருவரை பரிந்துரைக்கவும் அதுதொடர்பில் சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாற்று அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை வானிலை சீரடைந்தப் பின்னர் தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.