தாளையடி குடிநீர் திட்டம்: கள ஆய்வில் அமைச்சர் டக்ளஸ்

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

கிளி,மார்ச் 17

வடமாராட்சி, தாளையடி கிராமத்தில் உருவாக்கப்பட்டு வரும் யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உவர்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டதுடன் இத் திட்டத்தினை செழுமைப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

ஆசிய அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தினை உருவாக்கி வருகின்ற பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்ட சூயஸ் நிறுவனத்தின் கள அதிகாரிகள் உட்பட்ட அதிகாரிகளுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

சுமார் 14,559 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் உருவாக்கப்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் நாளாந்தம் சுமார் 24,000,000 லீற்றர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் வேலைத்திட்டங்கள் இவ்வருட இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கபடுவதுடன் முதல் கட்டமாக மீசாலை வரையான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத்தினை ஆரம்பிப்பதற்கும் தொடர்ச்சியாக ஏனைய பிரதேசங்களுக்கு விநியோகத்தினை விஸ்தரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் ஊடாக கிடைக்கின்ற நீரை தேசிய நீர் கட்டணத்தின் அடிப்படையில் மக்களுக்கு விநியோகிக்க உள்ளதாகவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை தாளையடி குடிநீர்த் திட்டத்தின் சமூக பாதுகாப்பு பங்களிப்பு திட்டத்திற்கு அமைவாக வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்திற்கு வழங்குவதற்காக 58 இலட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வரும் ஐஸ் தொழிற்சாலையையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

இந்த ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையின்  மூலம் நாளொன்றிற்கு 5000 கிலோ கிராம் ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்ய முடியும் என்பதுடன், ஐஸ் உற்பத்திக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான சூரிய கலங்களும் பொருத்தப்பட்டுள்ளமையினால் குறைந்த செலவில் ஐஸ் கட்டிகளை கடற்றொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.