
யாழில் அனேகமான கிராமப்புற பாடசாலைகள் மூடுவதற்கான சூழ் நிலை உருவாகியுள்ளதாகவும் எதிர்வரும காலங்களில் பிள்ளைகளை அயல் பாடசாலைகளுக்கு அனுப்புமாறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
அண்மையில் யாழ் துணவி அ.மி.த.க பாடசாலையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில் அண்மைய காலங்களில் கிராமப்புற பாடசாலைகளை நோக்கிய மாணவர்களின் அனுமதி கோரும் நிலை குறைவடைந்து நகர்புற பாடசாலைகளை நோக்கிய அவர்களது நகர்வுகளே இதற்கான காரணமாக மாறியுள்ளது.
பெற்றோர்கள் இவ்விடயத்தில் சிந்தித்து செயற்படவேண்டும் இன்றைய காலகட்டம் பலவழிகளில் எமது பிள்ளைகளை நாம் பாதுகாக்க வேண்டியவர்களாக காணப்படுகின்றோம். ஆக எமது அயல் பாடசாலைகளுக்கு எமது பிள்ளைகளை அனுப்புகின்ற தருணத்தில் இலகுவில் பிள்ளைகளை கண்காணிக்கூடிய சூழல் உருவாகின்றது.
ஐம்பதிற்கும் குறைவாக மாணவர்களின் இருப்பு குறைகின்றபோது பாடசாலையை மூடவேண்டிய நிலை உருவாகும் இப்பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். ஆக ஒரு பாடாசாலை மூடப்படுவதனால் ஒரு சமூகத்தின் எத்தனை பிரச்சினைகள் ஏற்படும் என்பதனை நன்கு சிந்தியுங்கள். பாடசாலை என்பது ஒரு சமூகத்தின் சொத்தாக காணப்படுகின்றது.
நகர்புற பாடசாலைகளிலும் அண்மைய நாட்களில் நடக்கின்ற சில துயரமான சம்பவங்களை நீங்கள் அறிவீர்கள் எனவே கிராமப்புற பாடசாலைகளை கைவிடாது தொடர்ந்து உங்கள் பிள்ளைகளின் கல்வியினை அயல் பாடசாலைகளில் தொடருங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.