12 முதல் 18 வரை படுகொலை வாரம்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

மே 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், முள்ளிவாய்க்காலில் மே 18ஆம் திகதி இடம்பெற்ற தமிழினப் படுகொலையை கடந்த இரு வருடங்களாக தமிழினப் படுகொலை வாரமாக அனுஷ்டித்து வரும் நிலையில், இவ்வருடமும் அனுஷ்டிக்கவுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செம்மணிப் பகுதியில் 12ஆம் திகதி நினைவு ஏந்தல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் 13ஆம் திகதியும், நவாலி சென். பீற்றர்ஸ் ஆலயத்தில் இடம்பெற்ற படுகொலை நினைவுநாள் 14ஆம் திகதியும் அனுஷ்டிக்கப்படும். இதேவேளை, நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற குமுதினி படகுப் படுகொலை 15ஆம் திகதியன்று நினைவு கூரப்படுவதுடன் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்படும். இறுதியாக மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவு ஏந்தல் அனுஷ்டிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.