குசல் பெரேரா ஆட்டத்தில் இல்லை

விளையாட்டு
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கண்டியில் பல்லேக்கலை மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
ஏலவே இங்கிலாந்து அணி 1க்கு 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கின்ற நிலையில், இன்றைய போட்டி இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில், குசல் பெரேரா உடல் உபாதையின் காரணமாக விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் சதீர சமரவிக்ரம இணைத்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறாயின், இதுவரையில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சதீர சமரவிக்ரம, 10 மாதங்களின் பின்னர் விளையாடும் முதலாவது ஒருநாள் போட்டியாக இது அமையும்.
இங்கிலாந்து அணியில் லியம் டோசன் காயம் காரணமாக வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஜோ டென்லி விளையாடவுள்ளார்.
அத்துடன் அணியில் மத்திய துடுப்பாட்ட வரிசையில் இங்கிலாந்து அணி மாற்றங்களை ஏற்படுத்தவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

பல்லேக்கலையில் இலங்கை அணி இறுதியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது.

இலங்கை அணியின் லசித் மலிங்க மீண்டும் விளையாட ஆரம்பித்து இதுவரையில் 35 ஒவர்களை வீசியுள்ள நிலையில், ஓவருக்கு 4.85 என்ற ஓட்ட வீதத்துடன், 17 சராசரியைப் பெற்று, 10 விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.