தொடர்ந்தும் ஏமாற முடியாது! ஜனாதிபதியுடனான பேச்சில் சம்பந்தன்

முக்கிய செய்திகள் 2

‘நாம் தொடர்ச்சியாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றோம். எமது மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – அதியுயர் அதிகாரம் வேண்டும்.

தொடர்ந்தும் நாம் ஏமாற முடியாது. இறுதி முடிவு ஒன்றுக்கு விரைவில் வந்தாக வேண்டும்’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீங்கள் எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாற முடியாது. பழைய வாக்குறுதிகளை, ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் சம்பந்தன் வலியுறுத்தினார். இலங்கை தமிழரசு கட்சியின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பிலேயே தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜூலையில் நடக்கும் பேச்சின்போது இறுதி முடிவு ஒன்றை முன்வைப்போம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், அரசியல் தீர்வு, காணி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய குழு அமைத்துள்ளதாகவும். அவற்றின் அறிக்கை 2 மாதங்களுக்குள் கிடைத்துவிடும் என்றும், அதன் பின்னர் உறுதியான நடவடிக்கை எடுப்பேன் எனவும் அத்துடன், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை இப்போதைக்கு நடத்தும் திட்டமில்லை என்றும் மாகாணங்களுக்கு இடைக்கால சபைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எனினும், வடக்கு – கிழக்கு, இணைந்த நிர்வாக சபையா அல்லது தனியான நிர்வாக சபையா என்ற தமிழரசு கட்சியினரின் கேள்விக்கு ஜனாதிபதி பதில் அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை மாதம் பேச்சு நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் ஆலோசகர சாகல ரத்நாயக்க மற்றும் திணைக்களங்களின் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.