முதலாம் தர மாணவர்களின் அனுமதியில் புதிய விதிமுறைகள்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அடுத்த வருடம் (2024) முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக தயாரிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் திங்கட்கிழமை (12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதையடுத்து இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி சிறுவர்களை முதலாம் தரத்தில் சேர்ப்பது தொடர்பான ஏற்பாடுகளும் இவ்வருட சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அந்த சிறுவர்களுக்கு மூன்று வீதத்தை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்ட போதிலும், குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்காமல் அவ்வாறான சிறுவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து சுற்றறிக்கையில் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் உடனடியாக அழைக்கப்படும் எனவும் அதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் அழைக்கப்படும். அடுத்த வருடம் முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பது குறைந்தது பெப்ரவரி மாதம் வரை தாமதமாகும் என்பதால் விண்ணப்பங்கள் கோருவதில் தாமதம் ஏற்படுவது பிரச்சினையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.