அனர்த்தத்தினால் உடமைகளை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதி ஆலோசனை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அனர்த்தத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்குள்ளான வீடுகளுக்காக நஷ்டஈடு வழங்குவதற்கும், வீடுகளில் பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு உரிய நஷ்டஈட்டை பெற்றுக் கொடுப்பதற்கும், உயிரிழந்த நபர்களின் இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்வதற்கும் தேவையான ஆலோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணமளிப்பதற்காக 150 மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கேற்ப எல்லா நேரங்களிலும் மேலதிக நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், தற்போது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் நிவாரண பொருட்களை இரத்மலானையில் அமைந்துள்ள விமானப்படை முகாம் சூழலுக்கு வந்து ஒப்படைக்குமாறு அனைவரிடத்திலும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனர்த்தத்திற்குள்ளான 07 மாவட்டங்களில் இருக்கும் அரச அதிகாரிகள் தொகை போதுமான அளவு காணப்படாவிடின், அதனை சூழவுள்ள மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

சொந்த இடங்களுக்கு வெளியில் சென்று வாழும் நபர்கள் உயிரிழந்து இருப்பின், அவர்களின் குடும்பங்களுடன் தொடர்புகொண்டு மரியாதையுடன் அவ்வுடல்களுக்கு இறுதி கிரியைகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.