
2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், தேர்தல் ஆணைக்குழு மூன்று தேர்தல்களை நடத்த 31 பில்லியன் ரூபாயை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இதற்கான மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்த மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு 10 பில்லியன் ரூபா மதிப்பீட்டை சமர்ப்பித்திருந்தது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்கள் அல்லது ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
அதன்படி, 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வருட வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16,855,000 எனவும், கடந்த ஆண்டுடன் (2022) ஒப்பிடுகையில் இவ்வருடம் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.