
ஹோமாகம பிரதேசத்தில் உள்ள மாடி வீடொன்றின் அறையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய கணினிப் பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது மனைவியை விட்டுப் பிரிந்து தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் தனது தாயின் வீட்டில் வசித்து வரும் நிலையில் பெற்றோர் கீழ் மாடியிலும் இவர் மேல் மாடியிலும் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இவர் கீழ் மாடிக்கு வராத காரணத்தினால் இவரது சகோதரி கடந்த 18 ஆம் திகதி அன்று மேல் மாடிக்குச் சென்று பார்க்கும் போது இவர் வீட்டில் இல்லாததை அவதானித்துள்ளார்.
பின்னர், உயிரிழந்தவரது நண்பரொருவர் நேற்று (21) இவரது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் இது தொடர்பில் அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவரது அறைக்குச் சென்று சோதனையிட்ட போது கட்டிலுக்குப் பின்னால் தரையில் வீழ்ந்து கிடந்த நிலையில் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் நான்கு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.