
தேசிய மக்கள் சக்தியினருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது பிரதானமாக ஐனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம், ஊடகப் பேச்சாளர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.