பாதுகாப்பற்ற ரயில் கடவையை புனரமைத்துத் தருமாறு கோரி போராட்டம்

முக்கிய செய்திகள் 1

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையினை பாதுகாப்பான ரயில் கடவையாக புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை காலை (11) முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்ற கிராமமான முகமாலை இந்திராபுரம் மக்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர் .

இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையானது இதுவரை புனரமைக்கப்படாமலும் பாதுகாப்பற்ற ரயில் கடவையாகவும் காணப்படுவதனால் இதனை பாதுகாப்பான நிரந்தரமான கடவையை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த பிரதேசத்தில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் குறித்த பிரதேசங்களில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வருவதனால் மாற்றுவழிப்பாதை எதனையும் பயன்படுத்த முடியாது உள்ளதாகவும் பிரதேச மக்கள் இவ்வீதியையே பயன்படுத்த வேண்டி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்

எனவே குறித்த பாதையை பாதுகாப்பான ரயில் கடவையாக புனரமைத்து தருமாறு கோரி ரயில்வே திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு மகஜர்களையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts