ஜனாதிபதி தேர்தலை தமிழர் தரப்பு பேரம்பேசும் களமாக மாற்ற இந்தியா ஆலோசனை

செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களுக்கும் இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(12) கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் அரசியல் அதிகாரப்பகிர்வு மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் இந்தியாவின் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட பொருளாதார அபிவிருத்தி முயற்சிகள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது உட்பட இலங்கையில் அரசியல் நல்லிணக்கம் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக இந்திய துணைத் தூதரகம் தமது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் ரெலோ சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கமும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் புளொட் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசனும், ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும் கலந்துகொண்டனர்.

இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாக உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவிக்கு, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை நியமிக்க ரெலோ மற்றும் புளொட் இலங்கை தமிழ் அரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

குறித்த விடயத்தை ஆராய்ந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு செல்வம் அடைக்கலநாதன் குத்து விளக்குச்சின்னத்தை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்டால் மாத்திரமே ஆதரிப்போம் என நிபந்தனை விதித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக தனித்து இயங்கப்போவதாகவும் அதற்கான முன்னேற்பாடே இந்திய தூதுவருடனான தனியான சந்திப்பு என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending Posts