
மருந்து ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மிஹிந்தலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த சிறுவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மிஹிந்தலை வைத்தியசாலையில் மருந்து ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 12 சிறுவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று (14) மாற்றப்பட்டுள்ளனர்.
வாந்தி மற்றும் வயிற்றுவலிக்காக சிகிச்சை பெறச் சென்றபோது கொடுக்கப்பட்ட 2 வகையான மருந்துகளால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் இந்நிலைமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
அனுராதபுரம் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் திலிப். எச். லியனகே ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
சகல சிறுவர்களும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்த டொக்டர் லியனகே, 24 மணித்தியாலங்களும் வைத்தியசாலையில் வைத்து அவர்களின் நிலைமையை அவதானித்ததாகவும், சிறுவர்கள் எவருக்கும் ஆபத்தான நிலை எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
சில மருந்துகளினால் இவ்வாறு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், 14 இலட்சத்திற்கும் அதிகமான மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும், வேறு எந்த வைத்தியசாலையிலும் இவ்வாறான ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படவில்லை எனவும் டொக்டர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள சில மாற்றம் காரணமாக இவ்வாறான ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அதற்கான மருந்தை வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சிலர் தடுப்பூசி போட மறுப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதாகவும், யாரும் தேவையில்லாத அச்சம் அடைய வேண்டாம் என்றும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறும் டொக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.