
மின் கட்டணம் அதிகரிக்கும் தினத்தன்று அதிகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணத்தை, மின் கட்டணம் குறைக்கப்படும் அதே தினத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் வர்த்தக சமூகத்திடம் கேட்டுக்கொண்டார்.
மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் இந்த நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணக் குறைப்பின் பலன் இன்னும் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.
“ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஒக்டோபர் மாதங்களில் மின் கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பின்னர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கையின் பேரில், ஏப்ரல் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் ஜூலை மாதம் திருத்தம் செய்ய இணக்கம் காணப்பட்டது. இந்த மின் கட்டணத் திருத்தம் ஜூலை 16 முதல் அமுலுக்கு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அடுத்த கட்டணத் திருத்த முன்மொழிவை ஒக்டோபர் மாதத்தில் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க டொலரிற்கு செலுத்த வேண்டிய தொகை அதிரடியாக உயர்ந்தது. இதன்படி, 09 வருடங்களின் பின்னர் மின் கட்டணத்தைத் திருத்தியமைக்க வேண்டியிருந்தது. 2014 இற்குப் பிறகு, ஓகஸ்ட் 2022 இல் மின் கட்டணம் திருத்தப்பட்டது.
உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 25% – 26% வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்களுக்கு 30% குறைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம், மின் கட்டணத்தை திருத்த முன்னர் நடைமுறையில் இருந்த கட்டணத்தை விடக் குறையும் வகையில் இந்த திருத்தத்தில், கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்திச் செலவைக் குறைத்தால்தான் எதிர்காலத்தில் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும். அதற்கு குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய மின் உற்பத்தி நிலையங்களை விரைவாக அமைக்க வேண்டும்.
இந்தப் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிர்மாணித்து முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணத்தை, இதனை விடக் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது.
180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 189,000 பேர் மாத்திமே உள்ளனர். 30 அலகுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 290 ரூபா மட்டுமே செலுத்த வேண்டும். நீங்கள் 01 – 60 அலகுகளை பயண்படுத்தினால், நீங்கள் 790 ரூபா செலுத்த வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.